Wednesday, December 3, 2008

தாவரக் கள்.

தாவரக் கள்.

தமிழ்நாட்டில் பனைமரங்களும், தென்னை மரங்களும் அதிக அளவில் உள்ளன. இந்த இரு மரங்களிலிருந்து பாளையிலிருந்து அறுத்தவுடன் ஒரு திரவம் வரும் அதை ஒரு சிறு சொப்புப் பானை கொண்டு தினமும் காலை மாலை சேகறிப்பது தான் பதநீர். அந்த பதநீர் சேகறிக்கும் பானையில் உட்புரம் சுண்ணாம்பு பூசி எடுப்பது பதநீர், சுண்ணாம்பு பூசாவிட்டால் கிடைப்பது கள். கள் நாட்படவைத்திருந்தால் போதையுண்டாகும். பதநீரைக் காச்சி பதத்துடன் எடுத்து குழிகளிலோ, அச்சுக்களிலோ வார்த்து காய்ந்த பின் எடுத்தால் அது வெல்லம். இனி கள் பற்றி மாநில விவசாய அணி செயலாளர் தாத்தூர் திரு.சுப்பிரமணியம் மற்றும் மாநில துணைத்தலைவர் திரு.பாலசுப்பிரமணியம் இருவரும் கள் இறக்க விதித்திருக்கும் தடையை நீக்கக் கோருவதற்கான காரணங்களை கீழே காண்போம்.

1.கள் தமிழ்நாட்டின் சுதேசி பானம்.

2.சங்க காலத்தில் உணவின் ஒரு பகுதியாக கள் இருந்து வந்துள்ளது. இதை யாரும் தவராக எடுத்துக் கொள்ள வில்லை. சங்க இலக்கியங்களே இதற்குச்சான்று.

3. கள்ளும் கரும்புச்சாறும் ஏறத்தாழ ஒன்றுதான். காலை மாலை என இரு வேளை இறக்கும் கள் போதை தராது. புளித்துப் போனால் தான் போதை இருக்கும். புளித்த கரும்புச் சாற்றிலும் இதே போதை இருக்கும். புளிக்காத கள் ஒரு சத்தான உணவு என்பது மகாத்மா காந்தி போன்ற மகான்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று.

4. சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதி நூல்களில் மட்டுமே கள்ளுண்ணாமை வலியுருத்தப் பட்டுள்ளது.

5. சுதந்திர இந்தியாவில் மது விலக்கை அமல்படுத்த முடியாத காரணத்தால், குஜராத் மாநிலத்தைத் தவிர இந்தியா எங்கிலும் மது விலக்குக் கைவிடப்பட்டது.

6. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மது விலக்கு இல்லை. கள், சாராயம் மற்றும் அயல் நாட்டு மது வகைகளும் அங்கே விற்கப்பட்டு வருகின்றன.

7. தமிழ்நாட்டில் கூடுதலான கெடுதி விளைவிக்க க்கூடிய அயல் நாட்டு இந்தியத் தயாறிப்பு(IMFL) மது வகைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுதேசி தயாறிப்பான கள்ளுக்குத் தடை விதித்துள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது அரசு கொண்டுள்ள விரோதப் போக்காகும்.

8. உலக அளவில் சுதேசி மதுவிற்குத்தடையும் விதேசி மதுவிற்கு அனுமதியும் கொடுத்திருப்பது எங்கும் இருக்க முடியாது. தமிழ் நாட்டைத் தவிர.

9. கள் உணவு ஊட்டத்திற்கான (Nutritional) சத்துக்களைக் கொண்டுள்ள ஒரு இயற்கையான பானம். சில நேரங்களில் மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் நலத்திற்குத் தீங்கு தராது. பக்க விளைவு இராது. இதில் போதைக்குக் காரணமான ஆல்க்ஹாலின் அளவி குறைவு. அதே நேரத்தில் (IMFL) மதுவில் போதை ஊட்டும் ஆல்கஹாலைத் தவிர எதுவும் இல்லை.

10. கள்ளை விட (IMFL) கூடுதலான கெடுதி விளைவிக்க க்கூடியது என்பது விஞ்ஞானிகளாலும் மருத்துவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அனைத்து மக்களுக்கும் இது தெரியும்.

11. தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு உண்மையல் மக்கள் நலனில் அக்கறை இருந்திருக்குமேயானால் (IMFL) மதுவிற்குத் தடை விதித்திருக்க வேண்டும். கள் இறக்க அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

12. சட்டம் என்பது கெடுதி விளைவிக்கக்கூடியது. குறைவான கெடுதி விளைவிக்கக் கூடியதே சட்டமாக இயற்றப்படவேண்டும்.
(LAW IS AN EVIL, LESSER EVIL WILL BE ENACTED AS LAW)

சட்டத்திற்கான இந்த வரையறைப்படி பார்த்தால் கள்ளுக்குத் தடை விதித்திருக்க க்கூடாது.(IMFL) க்கு மட்டும் அனுமதி தந்திருக்கக்கூடாது.

13. தென்னை, பனை மரங்களை வைத்திருப்பவர்களும், மரம் ஏறுபவர்களிம் பல லட்சம் பேர்கள், இவர்களால் ஒன்றுபட்டு ஆட்சியாளர்களைக் கவனிக்க முடியாது அதே நேரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே
‘டாஸ்மார்க்’ நிறுவனத்திற்கு(IMFL) மது தயாரித்துக் கொடுக்கிறார்கள். அவர்களால் ஆட்சியாளர்களைக் கவனிக்கும் விதத்தில் கவனிக்க முடிகிறது. இதன் மூலம் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான தொகை கை மாறுவதாக மக்களிடையே பேசப்படுகிறது.

14. கவனிக்கும் ஒரு கண்ணுக்கு வெண்ணெய், கவனிக்காத மறுகண்ணுக்குச் சுண்ணாம்பு என்பதில் நியாமும் இல்லை. நடுவு நிலைமையும் இல்லை.

15. இதில் ஆட்சியாளர்கள் நேற்றும் ஆதாயம் பெற்றார்கள். இன்றும் பெற்று வருகிறார்கள். நாளையும் பெறுவார்கள். தலைமை மட்டும் மாறி இருக்கும். ஆட்சி நிரந்தரமானது அன்று. ஆனால் சுரண்டல் நிரந்தனமானது. விழிப்புணர்வு இல்லாதவரை இந்த நிலை மாறாது. மக்களின் மனச்சாடசிக்கும் இது தெரியும்.

16. தமிழ்நாட்டில் குடிப்போர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி இருக்கலாம். இவர்களில் கூடுதலான விலை கொண்ட வெளிநாட்டு மதுவை வாங்கிக் குடிக்கும் பொருளாதாரத் தகுதி 25 லட்சம் பேர்களுக்கு மட்டுமே இருக்கும். மீதி 75 லட்சம் பேர் வறுமைக் கோட்டிற்கும் கீழாக வாழும் எளிய மக்களே ஆவார்கள். இவர்கள் குடிப்பதற்கு செலவிட்டது போக குட்ம்பச் செலவுக்குப் பணம் கொடுக்க முடியாத தால் பல குடும்பங்கள் சொல்லண்ணாத் துன்பத்திற்கு ஆளாகியுள்ளன. இதன் காரணமாக இன்றைய நடைமுறையில் பரவலாகக் குடும்ப
ப் பெண்களும் கூடக் கள் வரவுக்கு எதிர்புத் தெரிவிக்க மாட்டார்.

17. இன்று தமிழ்நாட்டில் பட்டி தொட்டிகளிலெல்லாம் அயல் நாட்டு மதுக்கடைகளைத் திறந்து ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. அதுவும் அரசே நேரடியான சுரண்டலில் புகுந்து விளையாடுகிறது. மக்கள் ஆடுகளாக இருந்துவிடக்கூடாது. ஆட்சியாளர்கள் ஓநாய்களாக மாறிவிடக்கூடாது.

18. கள்ளுக்கு அனுமதி இருந்தால் கிராமப் பணம் வெளியே போகாது. சிலருடைய கைகளில் செல்வம் குவிவது குறையும். கிராமப் பொருளாதாரம் மேம்படும்.

19. தென்னை பனை விவசாயிகளின் வருமானம் ஒரளவு கூடும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புப் பெருகும். களையாகக்கருதி வேகமாக வெட்டப்பட்டு வரும் ‘காமதேனு’ ‘கற்பகத்தரு’ என்று சொல்லப்பட்ட பனை மரங்கள் காப்பாற்றப்படும். கள் இறக்கப்படும் தென்னை மரங்கள் காப்பாற்றப்படும். கள் இறக்கப்படும் தென்னை மரங்கள் ’ஈரியோ பைட்’ பூச்சி தாக்குதலில் இருந்து தப்பும், மொத்தத்தில் தென்னை, பனை மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நியாயமான நடவடிக்கையாகும் இது.

இது போன்று மேலும் பல கருத்துக்கள் வெளியிட்டார்கள். நன்றி விவசாய அணிக்கு.

No comments: